தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகையை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள்

0 107

சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகை கைப்பற்றப்பட்டு, கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் சட்டத்தின் கீழ் இதற்கான அதிகாரம் இருப்பதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

அதற்கமைய, சீனி தொகை பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பேலியகொடையில் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையொன்றுக்கு நேற்றைய தினம்(14) சீல் வைக்கப்பட்டதுடன், அங்கிருந்து 270 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் நேற்று(14) சுற்றிவளைத்தனர். 

அங்கிருந்து 5 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறி சீனியை விற்பனை செய்த 300-இற்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான 25 சத வரியை இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்ததையடுத்து சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் விலை அதிகரிப்பை தடுக்கும் நடவடிக்கையாக விசேட வர்த்தமானியின் மூலம் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதற்கமைய, பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும் பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.