தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2048 ஆம் ஆண்டளவில்   பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்து

0 78

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில்   பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க   எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, தேசிய போக்குவரத்துக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், பொதுப் போக்குவரத்து சேவையில் ஒருங்கிணைந்த நேர அட்டவணைகள் மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07)  இடம்பெற்றது.

பயணிகள் போக்குவரத்து துறையில் காணப்படும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் செயற்திறனின்மையால் பயணிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்துத் துறையில் உயர் தரத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பயணிகள், பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் E- E- ticketing  முறை முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

7 தேசிய பேருந்து சங்கங்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் மாகாண மட்டத்தில் கூடிய விரைவில் கருத்துக்கள் பெறப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 09 மாகாணங்கள் தொடர்பில் 09 பிரதிநிதிகளை நியமித்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் இராஜாங்க அமைச்சர்  கோரிக்கை விடுத்தார்.

எதிர்காலத்தில் பேருந்துகளுக்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் GPS தொழில்நுட்பம் மற்றும் E- ticketing  சேவை முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் என்றும், கொட்டாவ பேருந்து நிலையம் மற்றும் மாகும்புர பல்நோக்கு பயணிகள் போக்குவரத்து நிலையத்தை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.