தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்தியக் கடற்படைக் கப்பல் கஞ்சர், திருகோணமலைக்கு விஜயம் 

0 82

இந்தியாவில் அதி நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கி இந்திய கடற்படைக் கப்பல் கஞ்சர் 2023 ஜூலை 29 முதல் 31 ஆம் திகதி வரை திருகோணமலைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இவ்விஜயத்தின்போது குறித்த இந்திய கடற்படைக்கப்பலின் கட்டளைத் தளபதி NVS பஹ்னி குமார் அவர்கள் கிழக்கு கடற் பிராந்திய தளபதி அவர்களை சந்தித்தல் உள்ளிட்ட பல்வேறு இரு தரப்பு சந்திப்புகளும், VBSS மற்றும் ஏவுகணை இயக்குதல் அடிப்படையிலான நிபுணத்துவ மட்ட சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சிரேஸ்ட இராணுவ மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகளுக்கு இக்கப்பலில் விருந்துபசார நிகழ்வொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மேலும், 2023 ஜூலை 31 ஆம் திகதி திருகோணமலைக் கடற்பரப்புக்கு அப்பால் கடல் சார் ஒத்துழைப்பு பயிற்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரு நாட்டு மக்களிடையிலான உறவினை கட்டி எழுப்பவும், இந்திய கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையிலான அந்நியோன்யத்தை மேலும் வளர்க்கும் முகமாகவும் பாடசாலை மாணவர்கள் இக்கப்பலை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் திருகோணமலை துறைமுகத்தில் இக்கப்பல் தரித்துநின்றபோது 2023 ஜூலை 30ஆம் திகதி பொதுமக்களும் இக்கப்பலைச் சென்று பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. யோகா அமர்வு, கரையோரம் சுத்தமாக்கல் மற்றும் விசேட பாடசாலை போன்றவையும் இக்கப்பல் விஜயத்தை முன்னிட்டு திருகோணமலையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

இப்பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை இலங்கை கடற்படையினர் வினைத்திறன்மிக்க வகையில் எதிர்கொள்வதற்கான திறனை மேம்படுத்துவதற்கான இந்திய இலங்கை ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலும் குறித்த குர்கி வகை இந்திய கடற்படைக் கப்பலின் விஜயம் முக்கியத்துவமிக்கதாக அமைகின்றது.

2023 சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் முகமாக 2023 ஜூன் 19-22 ஆகிய திகதிகளில் இந்திய கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பலான வாஹிர் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த்து. இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாஹர் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய கடற்படைக் கப்பல்களின் இலங்கை விஜயமானது இரு நாடுகளினதும் கடற்படையினரது இயங்குதிறன் மற்றும் தோழமையினை மேலும் வலுவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.