Developed by - Tamilosai
யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்தமை தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெய்வேந்திரன் மேனன் தெரிவித்தார்.
சந்தேகநபர்களை இன்று நண்பகல் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் யாழ். நீதவான் A.A.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்றைய தினம் நால்வரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்காக விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்காது அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் கூறினர்.