Developed by - Tamilosai
கடந்த 4 ஆம் திகதி வெலிசர, மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தார்.
17 வயதுடைய இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
16 வயதுடைய சிறுவன் ஒருவனால் செலுத்தப்பட்ட சொகுசு மோட்டார் வாகனம் ஒன்று வெலிசர பிரதேசத்தில் மேலும் சில வாகனங்களுடன் மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டிருந்தது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மாணவனின் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
52 வயதுடைய அவர் முன்னாள் இராணுவச் சிப்பாயாவார்.
விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மாணவன் மற்றும் அவரின் தந்தை ஆகியோர் வத்தளை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மஹாபாகே பிரதேசத்தை சேர்ந்த தங்க ஆபரண வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான சொகுசு கார் அவரின் மகனால் செலுத்திச் செல்லப்பட்டுள்ள் நிலையில் மகன் வாகனத்தை எடுத்து வந்தது தனக்குத் தெரியாது என சம்பவ இடத்திற்கு வந்த தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.