Developed by - Tamilosai
கெரவலப்பிட்டி – யுகதனவி அனல் மின் நிலையம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கு அவதானிப்புக்களை முன்வைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நேற்று (28) பிற்பகல் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி கட்சித் தலைவர்கள் மத்தியில் ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று நிலைமை மற்றும் அதிபர் – ஆசிரியர் சம்பளப் பிரச்சினையின் தற்போதைய நிலை, கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், இலங்கை துறைமுக அதிகாரசபையின் மேற்கு மற்றும் கிழக்கு முனைய அபிவிருத்தி, அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணித்தல், பொருட்களின் விலையேற்றம் மற்றும் இயற்கை விவசாயம் மற்றும் உரம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.
குறித்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஷ, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, காமினி லொகுகே, பந்துல குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாஉல்லா, டிரான் அலஸ், வீரசுமன வீரசிங்க, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.