Developed by - Tamilosai
நெல் மாபியாக்கள் அதிகளவிலுள்ள பொலநறுவை மாவட்டத்தில் தான் சேதனப் பசளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. போராட்டங்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர்.
சேதனப் பசளைத் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இல்லாவிடின் துரதிஷ்டவசாக மீண்டும் இரசாயன பசளையை இறக்குமதி செய்ய நேரிடும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 12 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் சகல கமநல சேவை காரியாலயங்களுக்கு 2,500 ரூபா பெறுமதியான விதைத் தொகுதிகளை வழங்கவுள்ளோம்.
மக்கள் தமக்குத் தேவையான மரக்கறிகளை தமது வீட்டுத்தோட்டத்தில் உற்பத்தி செய்து கொள்ளும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
விவசாயிகள் விவசாயம் செய்வதற்குத் தேவையான உரத்தைக் கோரி ஆரம்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை உரிய நேரத்தில் வழங்கியுள்ளோம். ஆனால் தற்போது தடைசெய்யப்பட்ட இரசாயன உரத்தை கோரி போரட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் உள்ளனர். சேதனப் பசளையைக் கொண்டு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை, அநுராதபுரம், பொலநறுவை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் 50 சதவீதமான விவசாய நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன.
விவசாய நிலங்களுக்கு உரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. உர விவகாரம் அரசியல்மயப்படுத்தப்பட்டதன் காரணமாக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. நெல் மாபியாக்கள் அதிகளவிலுள்ள பொலநறுவை மாவட்டத்தில் தான் போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எனக் குறிப்பிட்டுக் கொள்பவர்களுக்கு மாலையில் உணவுப் பொதி, சாராயப் போத்தல்களை வழங்குவது யார்? என்பது தொடர்பில் ஆராய்ந்தால் உண்மை வெளிவரும்.
எனவே, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து சேதனப் பசளை என்ற நல்ல திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிடின் துரதிஷ்டவசமாக இரசாயன உரத்தை மீண்டும் இறக்குமதி செய்ய நேரிடும்.
அதுபோன்று மீண்டும் விஷத்தை உண்ணத் தயாராகவுள்ளோம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.