Developed by - Tamilosai
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் கொரோனா திரிபு தொடர்பான பரிசோதனைகளில் அடையாளம் காணப்படும் வரை, நாட்டில் மறைமுகமாக பரவலடைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பிரதி சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
புதிய கொரோனா திரிபு தொடர்பில் இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்,
அவர் மேலும் கூறுகையில், இதற்கு முன்னர் பீட்டா,அல்பா மற்றும் டெல்ட்டா போன்ற கொரோனா வைரஸ் திரிபுகள் தொடர்பில் பேசியிருந்தோம்.உலகின் பல்வேறு பிரதேசங்களில் இந்த வைரஸ் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சிறிது காலம் செல்லும் போது அந்த திரிபுகள் சகல நாடுகளிலும் பரவலடைய ஆரம்பமாகின.
மக்களின் அதிகளவான பிரயாணங்களின் காரணமாகவே அதிகளவில் பரவலடைய ஆரம்பமாகியது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் நாட்டுக்குள் நுழையும் போதே தொற்றுடன் வருகிறார்களா என்பதை முன்கூட்டியே கூறமுடியாது. ஆகவே, மாதிரி பரிசோதனைகளின் அடிப்படையிலேயே அதனை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்படும் மாதிரி பரிசோதனைகளில் உறுதிபடுத்தப்படும் வரை குறித்த திரிபு நாட்டில் பரவலடைவததற்கான அதிகளவு வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆகவே, இந்த திரிபு இலங்கைக்கு வந்து விட்டதா இல்லையா என்பதை தேடுவதை விட நாட்டுக்குள் வருவதைக்கான வாய்ப்புகளை குறைத்து கொள்ள வேண்டியதே தற்போதைய அவசியமாகும். புதிய திரிபு அடையாளம் காணப்படும் நாடுகளில் இருந்து பயணிகள் நாட்டுக்கு வருவதை மட்டுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அநேகமான உலக நாடுகளில் புதிய தொற்றுக்குள்ளானவர்கள் படிப்படியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சகல நாடுகளிலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் வரையறைகளை விதிப்பதால் மாத்திரம் இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுகொள்ள முடியாது. ஒமிக்ரோன் தீர்த்து என்பதை அடையாளம் காண்பதை விட, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற வேண்டும் என்பதே தற்போதுள்ள முக்கிய கடமையாகும். மாறாக சுகாதார நடைமுறைகளை பயன்படுத்துவதன் ஊடாகவே கொரோனா தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்ள கூடியதாக இருக்கும்.
அதனூடாக ஒமிக்ரோன் திரிபு நாட்டுக்கு வந்தாலும் அதிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்ள கூடியதாக இருக்கும். இந்த தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களின் அதிகரிப்பை குறைத்து கொள்வதற்கும். மரணங்களை குறைத்துகொள்ள கூடியதாக இருக்கும். அதேபோன்று தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். என்றார்.