Developed by - Tamilosai
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலைக் காரணமாக களு கங்கை, நில்வள கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகளு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, காலி, களுத்தறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, இரத்தினபுரி, எலபாத்த, குறுவிட்ட மற்றும் எஹெலியகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்புநிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியுள்ள, பெல்மடுல்ல, அயகம மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டி, வரக்காபொல, கேகாலை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.