Developed by - Tamilosai
சென்ற பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்குக் கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க கடமையேற்பதற்காகச் சென்றிருந்த பஹ்மிதா றமீஸை கடமையேற்க விடாது ஹபாயா அணிந்து சென்றமைக்காக பல குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் இத்தாக்குதல் தொடர்பில் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தி சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சென்ற மார்ச் மாதம் சட்டரீதியான கடமையைச் செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாகக் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான றதீப் அஹமட், ஹஸன் றுஷ்தி, முஹைமின் காலித் மற்றும் ஸாதிர் அஹமட் ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணம் செய்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இம்மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டத்தரணிகளான முபஸ்லீன் மற்றும் றிஸ்வான் ஆகியோர் வாதிதரப்பில் ஆஜராகி இருந்தனர்.
இவ்வழக்கானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.