Developed by - Tamilosai
அநுராதபுரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றை வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுடன் எல்லை நிர்ணயத்தின் ஊடாக இணைக்க மேற்கொள்ளப்படும் செயற்பாட்டைக் கண்டித்து இன்று வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பழைய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளிட்ட குழுவினர், சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் அதன் பாதிப்புக்களை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.
குறித்த போராட்டத்தில் அடங்க மறுப்பது எம் இனத்தின் குணம், எமது நிலத்தில் எம்மை நிம்மதியாக வாழ விடு, சீண்டாதே சீண்டாதே தமிழர்களைச் சீண்டாதே, இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உடன் பாரப்படுத்து, மீண்டுமொரு இனவழிப்பு அரங்கேற்றமா? தமிழர் தாயகத்து நிலங்களை அபகரிப்பதை நிறுத்து போன்ற பதாகைகளைத் தாங்கியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.