Developed by - Tamilosai
ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து – க்ளாஸ்கோவில் நடைபெறவுள்ள ‘COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்’ தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ க்ளாஸ்கோ நகரைச் சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நாளை 31 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை க்ளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.
நவம்பர் முதலாம் திகதி மற்றும் 02ஆம் திகதி உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
‘காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறுகின்ற இம்மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற மாநாடுகளில், இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது.
சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர் மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.