Developed by - Tamilosai
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள், மீனவர்கள் இன்று குருநகரில் கறுப்புக் கொடி கட்டி போராட்டத்தை மேற்கொண்டனர்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உள்ளூர் இழுவைமடித் தொழில் தடை செய்யப்பட வேண்டுமென தெரிவித்த கருத்துக்கு எதிராகவே குருநகர், வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் அங்கு கூடியிருந்தவர்களால்
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இறுதியாக அவரின் கொடும்பாவிக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது:
இது தமிழ்க் கட்சிகளுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல என்றும் இது தனி மனிதனுக்கு எதிரான போராட்டம்.
பலபேருக்கு வாழ்வளிக்கும் இழுவை மடி தொழிலை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முழுமையாகத் தடை செய்ய வேண்டும் எனக் கோருவது அரசியல் எனவும் கருத்து தெரிவித்தனர்.
இன்றைய தினம் குருநகர் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் போராட்டம் மேற்கொண்டதுடன் அப்பகுதியில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.