Developed by - Tamilosai
நாட்டில் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக காணப்படும் மட்பாண்ட தொழில் அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் ,மடுக்கரை, செம்மண் தீவு, கருக்காய் குளம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மட்பாண்ட தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருளுக்கான விலையேற்றம் காரணமாக சட்டி, பானை, அடுப்பு, சிட்டி விளக்குகள் போன்ற பொருட்களை வியாபாரிகள் எவரும் அவர்களிடம் வந்து பெற்றுக்கொள்வது இல்லை என மட்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தூர பிரதேசங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று கொடுத்தால் செலவு இரட்டிப்பாகிறது எனவும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் யாவும் தேங்கி கிடப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் பலர் இந்த தொழிலில் இருந்து விலகி வேறு தொழிலுக்குச் சென்றுள்ளார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய தொழிலாக காணப்படும் இந்த மட்பாண்ட தொழிலை தங்களது காலத்தின் பின்பு தொடர்ந்து செய்வதற்கு ஆட்கள் இல்லை.காலப்போக்கில் மன்னார் மாவட்டத்தில் இந்த மட்பாண்ட தொழில் அழிந்து போகக் கூடும் என மட்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.