Developed by - Tamilosai
கிளிநொச்சி நகரத்தில் பொலிஸாருக்கு காணி அளவீடு செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே/ 23 கிராம அலுவலர் பிரிவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
இந்நிலையில் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர் .
இதனையடுத்து சம்பவ இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், காணி உரிமையாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அத்துடன் குறித்த காணி தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருவதாகவும் காணி உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காணி அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.