Developed by - Tamilosai
யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சைக் குழு உறுப்பினர் அப்பாத்துரை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய்த் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாகக் காணப்பட்டது.
இந்நிலையில், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு இன்று புதன்கிழமை உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த அமர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் பாலச்சந்திரன் போட்டியிடயிருந்த போதிலும் அவருக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டு ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தவிசாளர் தெரிவு விசேட அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நடுவுநிலை வகித்தனர்.
காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சைக் குழுவில் மூன்று உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டு உறுப்பினர்களும்,ஈ.பி. டி.பியில் இருவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஒருவரும் உள்ள நிலையில் ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் சுயேட்சைக் குழு தவிசாளர் பதவியை கைப்பற்றியுள்ளது.