Developed by - Tamilosai
காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி வவுனியாவில் 200 அடி உயர தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம் மேற்கொண்டதுடன், பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதாகத் தெரிவித்து உறவினர்கள் ஏ -9 வீதியை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இன்று பிற்பகல் 3.30 மணியிலிருந்து இரவு 7 மணிவரை குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியைக் காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன், கடந்த ஜூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களைத் தாங்கி விட்டு மனைவியைக் கொண்டு சென்றுள்ளதாக வவுனியா பொலிஸில் கணவன் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தனது மனைவி கடத்தப்பட்ட நிலையில் வாகன இலக்கம், வந்தவர்கள் விபரம் என்பன வழங்கியும் தனது மனைவியை இதுவரை பொலிஸார் மீட்டுத் தரவில்லை எனவும், பொலிஸார் பக்கச் சார்பாகவும், அசமந்தமாகவும் செயற்படுவதாகத் தெரிவித்தும் குறித்த இளைஞன் வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக கற்குழி பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனது மனைவி வராவிடின், தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்த நிலையில், குறித்த இளைஞனை மீட்க தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிய உறவினரான பிறிதொரு இளைஞன், போராட்டத்தில் ஈடுபட்டவருடன் இணைந்து தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை அவதானித்துக் கொண்டிருந்தனர். வவுனியா நகர சபை தீயணைப்பு வாகனம் வருகை தந்து ஒலிபெருக்கி மூலம் குறித்த இளைஞர்களை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு ஆதரவாக தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிப் போராடிய இளைஞன் அப் பகுதி இளைஞர்களால் மீட்கப்பட்ட நிலையில் பொலிஸார் அவரை அழைத்து சென்றிருந்தனர்.
மற்றைய இளைஞன் நீண்ட நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிடைக்காமையால், குறித்த இளைஞனை காப்பாற்ற கோரியும், பொலிஸாரின் அசமந்ததைக் கண்டித்தும் இளைஞனின் உறவினர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக ஏ-9 வீதியை மறித்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சிரேஷஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி நாளை தீர்வு பெற்றுத் தருவதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரும் உறவினர்களும் இணைந்து ஒலிபெருக்கி மூலம் வாக்குறுதி வழங்கி தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து இளைஞனை இறக்கினர்.
கீழே இறங்கிய இளைஞன் தனது மனைவியை மீட்டுத்தமாறு பொலிஸாரிடம் மன்றாடியதுடன், மயக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமார் மூன்றரை மணித்தியாலயமாக நடைபெற்ற குறித்த போராட்டத்தால் அப்பகுதியில் பதற்ற நிலையும் சுமார் அரை மணி நேரம் ஏ -9 வீதி போக்குவரத்துத் தடையும் ஏற்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.