Developed by - Tamilosai
இலங்கையின் வடக்குக் கடற்பிரதேசத்தில் கடற்படை மூழ்கடித்த படகில் இருந்து காணாமற்போன தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
தமிழகம் – புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இதில் ராஜேஸ்குமார் என்பவருக்குச் சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் கடற்பிரதேசத்திற்கு அருகில் வைத்து ஆபத்தில் சிக்கினர்.
இலங்கை கடற்படைக் கப்பலுடன் இவர்களது படகு மோதியதில் மூன்று மீனவர்களும் கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து அவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் இருவரும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த படகும் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.
இவர்களை இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பதற்கு பேச்சு நடத்தப்படும் நிலையில், காணாமற் போன மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இலங்கை கடற்படை இன்னும் இதனை உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.