Developed by - Tamilosai
சமகால அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அம்பாறையில் ஐக்கிய மக்கள் சக்தியை வலுப்படுத்த முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு கல்முனை தனியார் மண்டபம் ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி எம். எஸ். அப்துல் றஸாக் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கட்சி முக்கிய பிரமுகர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த கல்முனை பிரதேச ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டிணைந்து தேர்தல் கேட்பதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் இழந்து வருவதாகவும், ஐ.தே. கட்சியும் கடந்த காலங்களில் இந்த பிழைகளையே விட்டதாகவும் வலியுறுத்தினர்.
மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், ஐ.தே. கட்சியை அழித்தது போன்று இப்போது ஐ.ம. சக்தியையும் அழித்து கொண்டிருக்கிறார். அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டு எமது சுயகௌரவத்தை இழந்து அவர்களின் பின்னால் ஒளிந்து கொண்டு வந்தால் நாங்கள் ஜே.வி.பியை ஆதரிக்க தயாராக உள்ளோம் என்றனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஐ. ம.சக்தி ஆதரவாளர்கள்,
எமது வாக்குகள் வீணாக மாற்று பங்காளிக் கட்சிகளுக்கு செல்வதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். எம். மன்சூர், கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர், எம்.சி. அஹமட் காலத்திலிருந்து உத்வேகம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். எமது விருப்பு வாக்குகளை கொண்டு ஏனைய கட்சி உறுப்பினர்கள் எம்.பியாகும் நிலை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனால் எமது ஆதரவாளர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்.
கடந்த காலத்தில் விட்ட பிழைகளினாலேயே இன்று ஐக்கிய மக்கள் சக்தி பல வீழ்ச்சிகளை சந்தித்துள்ளது. தொடர்ந்து அரசியல் செய்வதாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி முஸ்லிம் கட்சிகள் விடயத்தில் அவதானம் தேவை என்றனர்.