தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஏல விற்பனை பூமியாக மாற்றப்பட்டுள்ளது . நாடு அபாயத்திற்குள் – சஜித் பிரேமதாச

0 144

இலங்கை தற்போது ஏல விற்பனை பூமியாக மாற்றப்பட்டுள்ளது. பொறுப்பற்ற ஆட்சியாளர்களினால் முழு நாடும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கும் நட்புறவு கொண்டாடும் கும்பலுக்கும் நாட்டின் தேசிய வளத்தை தாரைவார்த்து கொண்டிருக்கும் தருவாயில் அமைச்சரவை வெறும் சமிக்ஞை தூணாக ஆகியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டு மக்களின் நலனுக்காக எதுவுமே செய்யாத அரசாங்கம் என்ற வரலாற்று நாமத்தை பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம், கடந்த காலங்கள் பூராகவும் நாட்டிற்கு உரித்தாக்கியது எந்தளவு மோசமான நிலைமை என்பதை நாளுக்கு நாள் நடக்கும் சம்பவங்களின் ஊடாக உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.

நெற் பயிர்செய்கைக்காக விவசாய திணைக்களத்தினால் தமது விவசாய அமைப்புகளுக்கு 200 திரவ உர கொள்கலன்கள் வழங்கப்பட்டதாகவும் அவற்றில் 100 கொள்கலன்கள் வெடித்துள்ளதாகவும் இதன்காரணமாக திரவ உரம் விரயமாகியுள்ளதாக ஹொரவபொத்தான விவசாய அமைப்பின் ஊடாக தகவல் கிடைத்துள்ளது. 

இதுமாத்திரமின்றி நாடுபூராகவும் இவ்வாறு திரவ உர கொள்கலன் வெடிப்பு சம்பவங்கள் பதவாகியுள்ளன. விவசாயிகளை எந்தளவுக்கு அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என்பது இந்த சம்பவங்களின் ஊடாக உறுதியாகியுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தில் எந்தவொரு தரமோ,தரச்சான்றிதழோ, சுகாதார பாதுகாப்போ இல்லை. ஆனால் எங்கோ உள்ள அரசாங்கத்தின் உற்ற நண்பர்கள் கும்பலுக்கு இதன் இலாபம் கிடைக்கும் என்பது உறுதி. 

வரலாற்றில் எந்தவொரு யுகத்திலும் எந்தவொரு அரசாங்கமும் விவசாய தலைமுறையினரை இந்தளவுக்கு துரதிஷ்ட மோசமான நிலைமைக்கு தள்ளவில்லை என்பதுடன் அரசாங்கத்தின் இந்த மோசமான செயற்பாடுகள் மற்றும் பொறுப்பற்ற தீர்மானங்களினால் ஒருபுறம் நாட்டின் விவசாய தலைமுறையினரையும் மறுபுறம் நாட்டின் பொருளாதாரத்தையும் பல தசாப்தங்களுக்கு கட்டியெழுப்ப முடியாத அதள பாதாளத்திற்கு தள்ளப்படுவதனை தடுத்து நிறுத்த முடியாது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது முதல் நாட்டு பிரஜைகளை ஆய்வு கூடத்தின் எலிகளாக மாற்றியதுடன் தமக்கு சாதகமான தீர்மானங்களை கொண்டு வந்து நாட்டை மோசமான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளதாகும். விசேடமாக இந்நாட்டில் தொடர்ந்து நாளாந்தம் கொரோனா மரணங்கள் பதிவாகிறன. 

இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காத காரணத்தினால் தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15,000 அண்மித்துள்ளது.

சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் 620 க்கும் அதிகமாக பதிவான போதும் இது தொடர்பில் நிலையானதும் சீரானதுமான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளது. தற்போது இலங்கை ஏல விற்பனை பூமியாக மாற்றப்பட்டுள்ளது. பொறுப்பற்ற ஆட்சியாளர்களினால் முழு நாடும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. 

வெளிநாட்டவர்களுக்கும் நட்புறவு கொண்டாடும் கும்பலுக்கும் நாட்டின் தேசிய வளத்தை தாரைவார்த்து கொண்டிருக்கும் தருவாயில் அமைச்சரவை வெறும் சமிக்ஞை தூணாக ஆகியுள்ளது.

நாட்டின் வலுசக்தி தொடர்பான பாதுகாப்பையும்  காட்டிக்கொடுக்க அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான மோசமானதும் துரதிஷ்டமானதுமான நிலைமைக்கு நாட்டை தற்போதைய அரசாங்கம் தள்ளியுள்ளதுடன், இதற்கு மத்தியில் ஆளும் கட்சி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கற்பனை உலகில் மூழ்கி சுபீட்சம் தொடர்பாக புகழ் பாடி வருகின்றனர். 

எனவே நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் முன்னெடுக்கும் மனிதாபிமானமற்ற பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.