Developed by - Tamilosai
இன்று வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்குச் செல்லாமல் சேவைப் புறக்கணிப்பை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளுடனும் அரசாங்கத்தோடும் சேர்ந்து இயங்குகின்ற ஒரு சில அமைப்புக்களும் சங்கங்களும் இன்று 21 ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதென அறிவித்திருந்தாலும் அதிபர்களும், ஆசிரியர்களும் எங்கள் உரிமைக்காக சேவையைப் புறக்கணித்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையிலே இன்றும், நாளையும், அதிபர்கள் – ஆசிரியர்கள் விடுமுறையை அறிவிக்காமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எந்தவித அச்சமுமின்றி இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
கடமைக்குச் சமுகமளிக்காவிடின் சம்பளத்தை நிறுத்துவோமெனக் கூறினாலும் அவற்றை சட்ட ரீதியாகச் செயற்படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சேவைப் புறக்கணிப்பு நடைபெறும் பொழுது அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாக எந்தச் சிவில் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.
அரசாங்கம், ஆசிரியர்கள் – அதிபர்களோடு தொடர்புபடாத யாரை வைத்து பாடசாலைகளை ஆரம்பித்தாலும் பாடசாலைக்குச் செல்லாத இடத்தில் எந்த விதமான பாதிப்புக்களும் ஆசிரியர்கள் – அதிபர்களுக்கு ஏற்படப் போவதில்லை என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம்.
இந்த இடத்திலேயே 21, 22 ஆம் திகதிகளில் சேவைப் புறக்கணிப்பை மேற்கொண்டு 25ஆம் திகதி நாங்கள் பாடசாலைக்குச் செல்லத் தயாராகவுள்ளோம்.
அரசாங்கம் பல்வேறு விதமான கபட நாடகங்களை மேற்கொண்டு ஆசிரியர்கள் – அதிபர்களுக்கு எதிராகச் சமூகத்தைத் திருப்பும் வகையிலே செயற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த அரசாங்கம், பெற்றோர், மாணவர்களுடன் அதிபர்கள், ஆசிரியர்களை மோதவிட்டு பிரச்சினையைத் திசை திருப்பலாம் என்று சிந்திக்கின்ற நிலையில் தொழிற்சங்க ரீதியாக நாங்கள் முடிவு எடுத்து அரசாங்கம் அறிவித்த திகதிகளில் பாடசாலைக்குச் செல்லாமல் மாணவர்களின் கல்வியை வழங்கும் நோக்கில் எங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 25 ஆம்திகதி பணிக்குச் செல்வோம்.
21, 22 ஆம் திகதிகளில் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வது எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இருக்காது.
25 ஆம் திகதி நாங்களாக பாடசாலைக்கு வரும் போது உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள். நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தல் செயற்பாடுகளை செய்யத் தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.