Developed by - Tamilosai
நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வடக்கு – கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமி நாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் காலபோக, பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாகத் தேவைப்படும். இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு – கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்களுக்கு முன்பாக நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப் பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.