Developed by - Tamilosai
சீனாவிடமிருந்து இலங்கைக்கு சேதனப் பசளையைக் கொண்டுவரும் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக துறைமுகத் தலைவர், கப்டன் நிமால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
20 ஆயிரம் மெட்ரிக் தொன் சேதனப் பசளையுடன் குறித்த கப்பல் வெள்ளிக்கிழமை மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள் தொற்று நீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்திருந்தது.
நாட்டிற்கு வருகை தரும் கப்பலில் காணப்படும் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்றீரியாக்கள் காணப்படுவதாகவும் குறித்த நிலையம் எச்சரித்திருந்தது.
எனினும், குறித்த கப்பல் கொழும்பு துறைமுக எல்லைக்குள் இதுவரை பிரவேசிக்கவில்லை எனவும் கப்பல் வருகை தருவது தொடர்பாக எவ்விதத் தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சீன நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட பசளைகளின் மாதிரிகளில் ஆபத்தான பக்றீரியா காணப்படுகின்றமை இரண்டு சந்தர்ப்பங்களில் உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.